நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் அந்த வழக்குத் தொடர்பாக சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது ஏதோ வயசுக்கு வந்து குச்சில இருக்கிற புள்ளையை தூக்கிட்டு போய் சோளக்காட்டில் வைத்து கற்பழித்து விட்ட மாதிரி எல்லோரும் கதிறிட்டு இருக்கீங்க. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தினால் தான் அது வன்புணர்வு விருப்பத்துடன் வந்தால் அது வேறு. அந்த பொம்பள சொல்லுதுன்னு நீங்களும் அதை நம்பிட்டு பேசிட்டு இருக்கீங்களே என்று பேசினார். சீமானின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியதாவது, பொதுவெளியில் பெண்களை இவ்வளவு இழிவாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள். தான் செய்த பாலியல் சம்பவங்களை பெருமையோடு நார்மலைஸ் பண்ணுகிறார் சீமான். அநாகரிகமான உரையாடலை தொடரும் சீமானை மாதர் சங்கங்கள், #metoo என்ற பெயரில் இயங்குபவர்கள் இதுவரை கண்டிக்கவில்லை. மௌனம் காப்பது பெண்களுக்கு செய்யக்கூடிய துரோகமாகும். தமிழ் தேசியத்தின் பெயரில் அதுவும் பிரபாகரன் பேரில் பெண்களை இழிவுபடுத்துவதும் அதை பெருமைப்படுத்துவதும் அருவருப்பின் உச்சம் என விமர்சித்துள்ளார்.