மழைக்காலத்தில் குளிர்ச்சியான சூழல் மற்றும் அதிகரிக்கும் ஈரப்பதம் காரணமாக வீடுகளைச் சுற்றிலும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரிக்கலாம். மழைநீர் தேங்குவது, கழிவுநீர் கால்வாய்களில் நீர் நிரம்புவது போன்ற காரணங்களால் சில உயிரினங்கள் பாதுகாப்பான மற்றும் உலர்ந்த இடங்களைத் தேடி வீடுகளுக்குள் வரக்கூடும். குறிப்பாக தேள், கொசு, பூரான், குளவி, சிவப்பு எறும்புகள், இறக்கை கொண்ட கரையான்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் போன்றவற்றிடம் கவனம் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேள்கள் மழையால் தங்களது மறைவிடங்களில் தண்ணீர் புகும்போது, உலர்ந்த இடங்களைத் தேடி வீட்டுக்குள் வரக்கூடும். காலணிகள், துணிகள் அல்லது இருண்ட மூலைகளில் அவை மறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் பெருகுவதால், அவற்றின் மூலம் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் அதிகரிக்கலாம்.
பூரான்கள் அதிக ஈரப்பதம் உள்ள குளியலறை மற்றும் சமையலறை பகுதிகளில் காணப்படலாம். குளவிகள் மற்றும் சிவப்பு எறும்புகள் மழையில் உலர்ந்த இடங்களைத் தேடி வீடுகளின் ஜன்னல் அல்லது கூரைப் பகுதிகளில் கூடுகட்டலாம். மாலை நேரங்களில் விளக்குகளின் வெளிச்சத்தால் இறக்கை கொண்ட கரையான்கள் வீட்டுக்குள் வருவதுடன், மரப்பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடும்.
இந்த பூச்சிகள் வீட்டுக்குள் வருவதைத் தடுக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் நுண்ணிய வலைகள் பொருத்தலாம். கதவுகளின் கீழ் இருக்கும் இடைவெளிகளையும் மூடுவது உதவும். வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; குறிப்பாக பூந்தொட்டிகள், வாளிகள் மற்றும் கூரைப் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவது அவசியம்.
மேலும், மழைக்காலத்தில் காலணிகளை அணிவதற்கு முன்பும், நீண்ட நாட்களாக பயன்படுத்தாத துணிகளை அணிவதற்கு முன்பும் அவற்றை நன்றாகச் சரிபார்ப்பது நல்லது. பூச்சிகள் அதிகமாகத் தென்பட்டால், அவற்றை கையால் பிடிக்காமல் பாதுகாப்பான முறையில் அகற்றுவது முக்கியம். வீட்டில் தொடர்ந்து பூச்சித் தொல்லை இருந்தால், நிபுணர்களின் உதவியைப் பெறுவது பாதுகாப்பானது.
