
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் ஆன பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் இந்திய அளவில் கவனம் எடுத்த நிலையில் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற போது அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புகாருக்குரிய நபரை கைது செய்தால்தான் போராட்டத்தை நிறுத்துவோம் என கூறுவது தவறு என அண்ணாமலை கூறியுள்ளார். மல்யுத்த வீராங்கனைகள் அளிக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் தேவை. புகார் கொடுத்து விசாரணை நடந்துவரும் சூழலில், எம்பியை கைது செய்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.