குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு நாரகத்தின் குழி பகுதியை சேர்ந்தவர்கள் ஜிஸ்னு (26), சுர்ஜித் (22). இவர்கள் இருவரும் என்ஜினீயர்களாக, பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில்  பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் புத்தாண்டையொட்டி விடுமுறையில் ஊருக்கு வந்தனர். கடந்த 2-ஆம் தேதி அவர்கள் ஊரில் இருந்து மார்த்தாண்டம் படம்பபாறை பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று இரவு தங்கியுள்ளார்கள். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் மார்த்தாண்டம் ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கு மதுகுடித்துக் கொண்டிருந்த 5 பேர்,  திடீரென எழுந்து வந்து ஜிஸ்னு மற்றும் சுர்ஜித் ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியதால்,  இருவரையும் 5 பேர் கொண்ட கும்பல் அருகில் உள்ள மலைப்பகுதிக்கு கடத்தி சென்று,  அவர்களிடம் இருந்த ரூ.2 ஆயிரம் பணம்  மற்றும் 2 செல்போன்களையும் அந்த கும்பல் பறித்தது.

இதையடுத்து ஜிஸ்னுவின் தந்தை ஷாஜனுக்கு போன் செய்து கூகுள் பே மூலம் ரூ.5 ஆயிரம் அனுப்பும்படி கூறியதால், அவர் நேற்று அதிகாலையில் ரூ.5 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன்பின் அதிகாலையில் ஜிஸ்னு மற்றும் சுர்ஜித் ஆகியோரை அந்த ஆசாமிகள் விடுதலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக ஜிஸ்னு மற்றும் சுர்ஜித் ஆகிய இருவரும்  மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜெனால்டு (27) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.