மும்பையின் புகழ்பெற்ற கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில், பருவமழை காரணமாகக் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்ட வேளையில், நபர் ஒருவர் கொந்தளிப்பான கடலுக்குள் திடீரென குதித்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது.

சீறிப்பாயும் அலைகளுக்கு இடையே அவர் தத்தளிப்பதைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், வெறும் சமூக ஊடக “ரீல்ஸ்” மற்றும் லைக்குகளுக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து இந்த ஆபத்தான ஸ்டண்ட்டை அவர் செய்துள்ளார் என்று கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

“>

இருப்பினும், இந்த விமர்சனங்களுக்குப் பின்னால் இருந்த உண்மை வெளிவந்தபோது இணையவாசிகளே வியந்து போயினர். கடலில் குதித்த அந்த நபர், ஏதோ கவன ஈர்ப்புக்காக அதைச் செய்யவில்லை; மாறாக அவர் ஒரு அனுபவம் வாய்ந்த உள்ளூர் மீட்பாளர் என்பது தெரியவந்தது.

கடலின் நீரோட்டத்தையும் அலைகளின் தன்மையையும் நன்கு அறிந்த அவர், அங்கு வழக்கமாகச் செய்யும் ஒரு பயிற்சியின் பகுதியாகவே அவ்வாறு குதித்துள்ளார் என்று அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் சமூக வலைதளங்களில் விளக்கமளித்தனர்.

இறுதியில் அந்த நபர் யார் என்ற விபரம் அறியப்பட்டபோது நெட்டிசன்கள் தங்களது தவறை உணர்ந்து அவரைப் பாராட்டத் தொடங்கினர். கடலில் குதித்த அந்த நபரின் பெயர் முகமது நாசிம் ஷேக் ஆகும். அவர் வாழ்வாதாரத்திற்காக வடா பாவ் விற்கும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்வே ஆஃப் இந்தியா பகுதிக்கு அருகில் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட மனித உயிர்களைத் தனது அபாரமான நீச்சல் திறமையால் காப்பாற்றி, நிஜ வாழ்க்கையின் சூப்பர் ஹீரோவாக விளங்கி வருகிறார் என்ற உண்மை அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.