கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்தனர். இவர்களது மகள் கவிதாமணி திருமணம் முடிந்து தனது கணவருடன் வசித்து வந்தார். நேற்று ராஜேஸ்வரி தனது வீட்டு கட்டிலில் படுத்து கிடந்த நிலையிலும், காளிமுத்து தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் காளிமுத்துவுக்கு கேரளா லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் குடும்ப செலவுக்கு வைத்திருந்த பணத்தையும் லாட்டரி சீட்டு வாங்குவதில் செலவிட்டுள்ளார். இதனை ராஜேஸ்வரி கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபத்தில் ராஜேஸ்வரி தனது மகள் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காளிமுத்து தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்த போது வீட்டில் லாட்டரி சீட்டு இருந்தது. இதனை பார்த்ததும் ராஜேஸ்வரி இன்னும் லாட்டரி சீட்டு வாங்குவதை நிறுத்தவில்லையா? என கேட்டு தனது கணவரை கண்டித்தார். இதில் கோபமடைந்த காளிமுத்து தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதால் மூச்சு திணறி அவர் உயிரிழந்தார். பின்னர் போலீசுக்கு பயந்து காளிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது