தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. அதன் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ. 1977 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு இதுவரை 12 கோடி மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஐஆர்டி மூலம் தெரிய வந்தது.

இதனால் தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றிய அரசு பாகுபாடு காண்பித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரத்தில் தற்போது தற்காலிகமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் நாகராஜன் கடந்த ஜனவரி மாதம் காலமானார். இதன் காரணமாக தற்போது உத்திரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர். பிரசாந்த் லாவானியாவை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி இயக்குனராக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.