
ஆண்டிபட்டி அருகே ஒரு திருமண மண்டபத்தில், தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென திருமணத்தில் விருப்பமில்லை என கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்காக பெண் தேடும் பணியில் ஈடுபட்ட பெற்றோர், உறவினர்கள் மற்றும் திருமண தகவல் மையத்தின் மூலமாக புதுச்சேரியில் உள்ள ஒரு பெண் வீட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாப்பிள்ளை – பெண் பார்க்கும் நிகழ்வும் நடைபெற்றது. வரதட்சணை விவரங்களும் பேசி முடிக்கப்பட்டன.
இருவீட்டாரும் சம்மதத்துடன் ஆண்டிபட்டி அருகே உள்ள திருமண மண்டபத்தில் கல்யாண ஏற்பாடுகள் முழு விமரிசையாக நடத்தப்பட்டன. புதுச்சேரியிலிருந்து பெண் மற்றும் அவரது உறவினர்கள் முன்தினமே மண்டபத்தில் வந்து சேர்ந்தனர்.
நிச்சயதார்த்தமும், திருமணத்துக்கு தேவையான அனைத்து சடங்குகளும் முறையாக நடைபெற்றன. ஆனால் தாலி கட்டும் முக்கிய தருணத்தில் மணமகள் திடீரென எழுந்து, “இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை” என கூறி மாலையை கழற்றி, நேராக அறைக்குள் சென்றுவிட்டார்.
இதனால் மண்டபத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் பேசியும், விவகாரம் சுமுகமாகத் தீரவில்லை. பிறகு மணமகன் தரப்பினர் திருமண ஏற்பாடுகளுக்காக செய்த செலவைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என கேட்டனர். பெண் தரப்பினர் அந்தத் தொகையை வழங்கியதற்குப் பிறகு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.