சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வு உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு, குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 343 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவை சார்பில் தலைவர் ஆறுமுகம் சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் மதுசூதனன் ரெட்டியிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, எங்களது பாரம்பரியமான மஞ்சுவிரட்டை ஜல்லிக்கட்டு என மாற்றி நடத்த அறிவுறுத்துவதை கைவிட வேண்டும். ஏனென்றால் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளைகளுக்கு துண்டு மட்டுமே பரிசாக வழங்கப்படும். ஆனால் விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுப்பதனால் தற்போது மஞ்சுவிரட்டு சூதாட்டமாக மாறி வருகிறது.

அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மஞ்சுவிரட்டை மாலை வரை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அதை போல் வாகனங்களில் காளைகளைக் கொண்டு வருவதை போலீசார் தடுத்து நிறுத்து வழக்கு பதிவு செய்கின்றனர். வருடம் முழுவதும் நடைபெறும் மஞ்சுவிரட்டை ஐந்து மாதங்களுக்கு மட்டுமே நடத்த வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய அரசு வலியுறுத்த வேண்டும். இதுவரை மஞ்சுவிரட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என அ ந்த மனுவில்  அவர்கள் கூறியுள்ளனர்.