மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியில் தன் மகளின் முகம் பார்க்கும் முன்பே ராணுவ வீரர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது மகாராஷ்டிர மாநிலம் சதாராவைச் சேர்ந்தவர் பிரமோத் ஜாதவ். ராணுவ வீரரான இவர், தனது மனைவியின் பிரசவத்திற்காக விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில், அவருக்குக் குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார்.

பிரமோத் ஜாதவ் உயிரிழந்த நிலையில், அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தந்தை மறைந்த செய்தி தெரியாமல் அக்குழந்தை பூமிக்கு வந்தது அங்கிருந்தோரை கண்ணீரில் ஆழ்த்தியது.

பிறந்து 8 மணி நேரமே ஆன தனது கைக்குழந்தையுடன், மருத்துவமனையிலிருந்து ஸ்டிரெச்சரில் வந்த மனைவி, தனது கணவர் பிரமோத் ஜாதவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட காட்சி காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மகளின் முகம் பார்க்கும் முன்பே அந்த ராணுவ வீரரின் உயிர் பிரிந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.