தமிழக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் சுமாராக 13,000 பேராசிரியர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை கல்வி வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிவந்த பேராசிரியர்கள் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, மருத்துவக் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டன. உரிய தகவல்கள் கிடைக்காததால் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஆணையம், கோரப்பட்ட அனைத்து விவரங்களையும் வழங்கவும், பேராசிரியர்களின் பட்டியலை இணையத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவப் பல்கலைக்கழக நிர்வாகம் சுமார் 903 பக்கங்கள் கொண்ட ஆய்வு விவரங்களை அறப்போர் இயக்கத்திடம் வழங்கியதுடன், மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ், செவிலியர் பணி, மருந்தியல் உள்ளிட்ட 9 முக்கிய மருத்துவக் கல்விப் பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்ட சுமாராக 13,000 பேராசிரியர்களின் பட்டியலையும் தங்களின் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் (https://tnmgrmu.ac.in) வாயிலாகப் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.

“>

 

இதற்கிடையே, வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஏதேனும் முறைகேடுகளோ அல்லது போலி பேராசிரியர்களின் பெயர்களோ இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்களை ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என அறப்போர் இயக்கம் பொதுமக்களையும் மாணவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.