
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல்களை இந்தியாவின் பாதுகாப்பு படைகள் முறியடித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
அதன் பிறகும் பாகிஸ்தான் அத்துமீறியதால் இனி தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் போரை நிறுத்தாவிட்டால் இனி அமெரிக்கா இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யாது எனக் கூறியதால் தான் இருவரும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.
ஆனால் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்று தான் சண்டை நிறுத்தப்பட்டதாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையீடு பற்றி பிரதமர் மோடி எதுவும் கருத்து கூறவில்லை.