நடிகர் விஜயின் லியோ படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அந்த மனுவில், வன்முறை காட்சிகள் நிறைந்த ‘லியோ’ படத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும். படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வன்முறை காட்சிகள் அதிகமாக உருவாக்கி, அதனை திரைப்படமாக்கியதால் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என மனுதாரர் கோரி மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவினை மதுரையை சேர்ந்த ராஜமுருகன் என்பவர் தாக்கல் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் லியோ. இந்த படம் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளதோடு பெரும்பாலும் ஆயுத கலாச்சாரம் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேலும் மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி அதன்தொடர்பான முரண்பாடான கருத்துக்களையும், எதிரிகளை பழி வாங்குவதற்கு பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும். போதை பொருள் பயன்படுத்துதல், மனிதர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட இளம் சிறார்களை பாதிக்கக்கூடிய பார்க்கத் தகாத காட்சிகளை லோகேஷ் கனகராஜ் படமாக்கி இருக்கிறார்.

மேலும் கலவரம், சட்டவிரோத செயல்கள், போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், அதிகாரத்தை அச்சுறுத்துவது, காவல்துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் போன்ற சமூக விரோதமான கருத்துக்களை தவறான வழிகாட்டுதல்களை தனது திரைப்படத்தின் மூலம் காண்பித்திருக்கிறார். இது இளம் சிறார்களை, இளைய சமுதாயத்தை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்.

இது போன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். லோகேஷ் கனகராஜ் மற்றும் லியோ திரைப்பட குழுவினர் மீது வன்முறையை தூண்டும் வகையில் திரைப்படமாக்கியதற்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டங்களில் படி வழக்கு பதிவு செய்து இந்த ‘லியோ’ படத்திற்கு முழுமையாக எந்த தளத்திலுமே காண்பிக்கப்படாத வகையில் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எனவே வழக்கு விசாரணை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அடுத்த வாரங்களில் இந்த வழக்கில் இது குறித்த உத்தரவு ஏதேனும் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும். லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பு உள்ளது. அதில் என்ன மாதிரியான கருத்துக்களை யோகேஷ் கனகராஜ் சொல்ல வருகிறார் என தெரியவரும்..