
சீனாவின் பாப் மார்ட் என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான வாங் நிங், கடந்த சில நாட்களில் உலகம் முழுவதும் பேசப்படும் நபராகி விட்டார். அதற்கு காரணம் – “லபுபு” என்ற ஒரு சிறிய பொம்மை.
இந்த பொம்மையை கடந்த 2015-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் பிறந்த கேசிங் லுங் என்ற கலைஞர் தனது ‘தி மான்ஸ்டர்ஸ்’ என்ற புத்தகத்துக்காக உருவாக்கினார். முயல் காதுகள், சிரிக்கும் முகம், வித்தியாசமான தோற்றம் ஆகியவை கொண்ட இந்த பொம்மை, 2019-ஆம் ஆண்டு பாப் மார்ட் நிறுவனம் மூலம் விற்பனைக்கு வந்தது.
இந்த பொம்மைகள் “பிளைண்ட் பாக்ஸ்” எனப்படும் மூடிய பெட்டிகளில் விற்கப்படுகின்றன. இதன் மூலம், எந்த பொம்மை வரும் என்பதை வாடிக்கையாளர்கள் அறிய முடியாது. அதனால் பலரும் ஒரு தொகுப்பை முழுமையாக சேர்க்க தொடர்ந்து வாங்குகின்றனர். இதுவே மிகப்பெரிய விற்பனை வெற்றியாக மாறியுள்ளது.
இந்த லபுபு வெற்றியால் வாங் நிங்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ₹13,700 கோடி அதிகரித்துள்ளது. டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லபுபு தொடர்பான வீடியோக்கள் மழை போல பரவியதால், இளையர்கள் கூடுதல் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
இங்கிலாந்தில் கூட இந்த பொம்மை வாங்கக் கடைகளில் வாடிக்கையாளர்கள் தள்ளுமுள்ளு செய்ததால், அங்குள்ள கடைகள் தற்காலிகமாக இந்த பொம்மை விற்பனையை நிறுத்தியிருந்தன. ஆனாலும் ஆன்லைனில் விற்பனை தொடர்ந்து நடைபெற்றது. ஜூன் மாதத்தில் மீண்டும் கடைகளில் விற்பனை தொடங்கவுள்ளனர்.
மேலும் ரியானா, டுவா லிப்பா, பிளாக்பிங்க் லிசா போன்ற பிரபலங்கள் கூட இந்த பொம்மையை ஹேண்ட்பேக்குகளுடன் வைத்திருப்பது காரணமாக, லபுபு இப்போது ஃபேஷன் டிரெண்டாகவும் மாறியுள்ளது.