
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷிவ்ஜீத் சுரேந்திர சிங், ஜெய் சாவ்தா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செவி மற்றும் பேச்சு குறைபாடு உள்ளது. இவர்களுக்கு அலி சாதிக் அலி ஷேக் (30) என்ற நண்பன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 தேதி ஜெய் சாவ்தாவின் வீட்டில் நடைபெற்ற விருந்திற்கு இவரை அழைத்துள்ளனர். அப்போது 3 பேரும் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே சிங் மற்றும் சாவ்தா ஆகிய இருவரும் சேர்ந்து ஷேக்கை சுத்தியலை கொண்டு பலமாக தாக்கியுள்ளனர்.
இதில் ஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் அவர்கள் இருவரும் ஷேக்கின் உடலை ஒரு சூட்கேசில் அடைத்துக் கொண்டு, உடலை அப்புறப்படுத்த ரயில்வே நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் சூட்கேசுடன் நிற்பதை பார்த்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். பின் அந்த சூட்கேஸிலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதை கவனித்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றார்.
ஆனால் சிங் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் 3 பேரும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷேக்கை கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.