
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் தாம்சன் சாலையில் டெய்லர் கடை நடத்தி வந்தவர் 60 வயதான செல்வன். இவரது மனைவி அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்திரமணி என்பவர், தனது பேண்டை ஆல்ட்ரேஷன் செய்யச் சொல்லி செல்வத்தின் கடைக்கு வந்தார்.
இதனையடுத்து மாலை 4 மணியளவில் அந்த பேண்டை பெற்று சென்ற சந்திரமணி, அது தனக்கு ஏற்கனவே இருந்தபடி இருந்ததாகக் கூறி இரவு மீண்டும் கடைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த சந்திரமணி கடையில் இருந்த கத்தரிக்கோலை கொண்டு செல்வனை பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் சந்திரமணி அங்கிருந்து தப்பித்து சென்றார்.
இந்த துயரச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், கடைக்குச் சென்ற போலீஸ்காரர் ஒருவர் ரத்தம் கொட்டிய நிலையில் செல்வம் கிடப்பதை கண்டு, உடனடியாக மேலதிக போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த போலீசார் செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திட்டுவிளை சந்தையில் அமைந்திருந்த கடையின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த காவல்துறையினர், வெறும் 6 மணி நேரத்தில் சந்திரமணியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.