கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் ஊசி, பாசிமாலை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரம் பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்குகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 4 மாத ஆண் குழந்தையுடன் வடசேரி பேருந்து நிலையத்திற்கு வந்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் முத்துராஜ் மனைவி மற்றும் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

அதிகாலை கண்விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துராஜ் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். அப்போது நள்ளிரவில் ஒரு பெண் குழந்தையை தூக்கி சென்றதாக சிலர் தெரிவித்தனர். இதுகுறித்து முத்துராஜ் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது