ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் மாவட்டம், ச புனாவலி கிராமத்தில், 70 வயதான லஹரிலால் பாலிவால் மற்றும் அவரது மனைவி ராதாபாய் (67) ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவர்களது வீட்டில் இருந்த இரும்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக அண்டை வீட்டைச் சேர்ந்த முக்கியச் சூத்திரதாரி உட்பட 5 பேரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி லஹரிலால் தம்பதியைக் காணவில்லை என்றும், வீட்டின் கதவு திறந்துகிடப்பதாகவும் அவரது தம்பி போலிசில் புகாரளித்தார். போலிசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய சோதனையில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி தம்பதியின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு, வீட்டின் இரும்புப் பெட்டிக்குள் படுக்கைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தடயவியல் மற்றும் சைபர் குற்றப்பிரிவு உதவியுடன் போலிசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், அண்டை வீட்டைச் சேர்ந்த குஷால் பாலிவால் (26) என்பவரே இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. ஆடம்பர வாழ்க்கை மற்றும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த குஷால், வட்டிக்குப் பணம் கொடுக்கும் லஹரிலால் தம்பதியை இலக்கு வைத்து, கடந்த ஒன்றரை ஆண்டாகக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகக் குஜராத்தைச் சேர்ந்த தனது நண்பர்கள் சந்தன் யாதவ், விகாஸ் கார்வாட், திலீப் சௌத்ரி மற்றும் ஊரைச் சேர்ந்த கிஷன், ஜீவன் ஆகியோரைச் சேர்த்துச் சதி திட்டம் தீட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 10 அன்று தம்பதியின் வீட்டிற்குச் சென்று நிலைமையை உளவு பார்த்த குற்றவாளிகள், ஆகஸ்ட் 11 இரவு வீட்டுக்குள் ரகசியமாகப் புகுந்துள்ளனர். தம்பதி தூங்கிய பிறகு, இருவரையும் அடித்துக் கொன்றுவிட்டு, வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் உடல்களை இரும்புப் பெட்டியில் அடைத்து வைத்துவிட்டு, கொலையை மறைக்க அவர்களின் செல்போன் மற்றும் செருப்புகளையும் எடுத்துச் சென்று வழியில் வீசியுள்ளனர்.
இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளி குஷால் பாலிவால், சந்தன் யாதவ், திலீப் சௌத்ரி, கிஷன் பாலிவால் மற்றும் ஜீவன் பாலிவால் ஆகிய 5 பேரைப் போலிசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய விகாஸ் கார்வாட் என்பவரைத் தேடிக் குஜராத்திற்குத் தனிப்படை விரைந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் கொலையுறுப்புகளைக் கைப்பற்றி போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
