
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் ஏசுராஜ் மகன் சகாயராஜ் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை குடும்பத்தினர் நாகை மாவட்டம் திருமருகல் அருகே நெய்குப்பை பகுதியில் உள்ள கோவிலுக்கு உறவினர் ஒருவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து நெய் குப்பையில் உள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் சகாயராஜ் ஒரு கடையில் குளிர்பானம் கொடுத்துள்ளார்.
அதன்பின் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்று வருவதாக கூறி சென்ற அவர் அங்கு கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் பதறிப் போன அக்கம் பக்கத்தினர் சகாய ராஜை பிடித்து கைகளை கட்டி வைத்தனர். அதன் பின் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.