
இங்கிலாந்தில் சமீபத்தில் பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தொழிலாளர் கட்சி தலைவர் ஸ்டார்மர் பிரதமராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி பெற்றனர். அதோடு லீ செஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான ஷிவானி ராஜா (29) வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி வேட்பாளர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜேஷ் அகர்வால் தோல்வி அடைந்தார்.
இந்த தொகுதியில் ஷிவானி ராஜா முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். குஜராத்தை சேர்ந்த ஷிவானி ராஜா தொழிலதிபர் ஆவார். அதையடுத்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது ஷிவானி ராஜா பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில், நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘லீசெஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவபடுத்துவது தனக்கு பெருமையாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.