தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். நடிகை அனுஷ்கா தமிழில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம், இரண்டாம் உலகம், சிங்கம், லிங்கா, என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக அனுஷ்கா இருக்கிறார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா பெயரில் பண மோசடி நடந்துள்ளதாக தயாரிப்பாளர் லட்சுமணன் சாரி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது தயாரிப்பாளர் லட்சுமணன் சாரியிடம் சினிமா மேனேஜர் எல்லா ரெட்டி அனுஷ்காவின் கால்ஷீட் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 51 லட்சம் முன்பணம் வாங்கியுள்ளார்.

அதன் பிறகு நடிகை அனுஷ்காவை சந்திக்க வைப்பதாக கூறி அவரை பலமுறை ஹைதராபாத்துக்கு அழைத்து சென்ற நிலையில் ஒருமுறை கூட அனுஷ்காவை சந்திக்க வைக்கவில்லை. இதேபோன்று இசையமைப்பாளர் மணி ஷர்மாவிடமும் கால்ஷீட் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 25 லட்சம் எல்லா ரெட்டி வாங்கியுள்ளார். ஆனால் அவரையும் சந்திக்க வைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமணன் சாரி அனுஷ்கா பெயரில் மோசடி நடந்த விவரத்தை காவல் நிலையத்தில் புகாராக கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.