பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் திரையிட முயன்ற போது அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனை சேர்ந்த பிரபல பிபிசி நிறுவனம் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் பற்றியும் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி பற்றியும் இந்தியா-தி மோடிக் க்வெஸ்டின் என்ற சர்ச்சைக்குரிய ஆவண படத்தை வெளியிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பிரிட்டனின் ஊடக கண்காணிப்பு அமைப்பிடம் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.

ஆனால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் இந்த ஆவண படத்தை திரையிட்டு வருகிறார்கள். அந்த வகையில் டெல்லியில் உள்ள ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் பிரதமர் மோடி தொடர்பான சர்ச்சை ஆவணப்படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் கல்லூரி நிர்வாகம் ஆவணப்படத்தை வெளியிடும் முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி ஆவணப்படத்தை வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இருப்பினும் மாணவர்கள் சங்கம் சார்பில் ஆவணப்படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் செல்போனில் அந்த ஆவண படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் மாணவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் ஊர்வலமாக சென்று ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் பிரதமர் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணத்தை திரையிடும்போது மாணவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.