மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு இந்து முன்னணி அமைப்பு மற்றும் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிலையில் அண்ணா மற்றும் பெரியார் கடவுள் மறுப்பு நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளதாக தற்போது திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றி இன்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி கூறியதாவது, திராவிடத்திற்கு எதிரான இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டது வெட்கக்கேடு. இந்து சமய அறநிலையத்துறை மட்டும் இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நிலையில் சிறுபான்மையினருக்கு தான் பாதுகாப்பு தேவை.

முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச் செல்ல முடியாது அவர் நம்மோடு தான் இருப்பார். யார் தமிழகத்தை ஆட்சி செய்தால் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும். தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேஷம் போடுவது எடுபடாது. அதிமுக என்ற பெயர் வைத்துக்கொள்ளவே அவர்கள் தகுதியற்றவர்களாக மாறிவிட்டனர்.

இந்த முருகன் மாநாட்டை திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லி தான் நடத்தியுள்ளனர். அவர்கள் கட்சியின் பெயரில் திராவிடம் இருப்பதையே எடப்பாடி பழனிச்சாமி மறந்துவிட்டார். நாங்கள் பாஜகவின் கொத்தடிமைகள் என்பதை இபிஎஸ் நிரூபித்துள்ளார். பாஜக தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள அருமையான அடிமைகள் அவர்கள்.

எல்லா மாநிலங்களிலும் கலாட்டாவை உருவாக்கி பயங்கரவாதத்தை உண்டாக்கி உள்ளே நுழைகிறார்கள். அதேபோன்று இங்கேயும் சச்சரவுகளை உருவாக்கி உள்ளே நுழைய திராவிடம் விடாது. இங்கே எப்போதும் சிங்கில் என்ஜின் தான்.

இதனை இயக்குபவர் எங்களுடைய ஒரே தலைவர் தளபதி ஸ்டாலின் தான். எங்களுடைய தோழமைக் கட்சிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மேலும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று கூறினார்.