
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே இரண்டு அணிகளும் விளையாடி வரும் நிலையில் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் விளையாட உள்ளது.
அதேசமயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஏறக்குறைய அரை இறுதிக்கு செல்வது உறுதியாகி விடும். இப்படியான நிலையில் இந்த ஆட்டத்தில் ஒரு பாகிஸ்தான் வீரர் நினைத்தால் கூட இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற முன்னாள் வீரர் யுவராஜ் சிங் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், போட்டி துபாயில் நடைபெறுவதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதில் முன்னிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அங்கு அதிகமான போட்டிகளை பாகிஸ்தான் அணி விளையாடியுள்ளது.
அதே சமயம் அவர்கள் சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொள்கின்றனர். இந்திய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர். பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் குறைவாக இருந்தாலும் ஒரு வீரர் நினைத்தால் கூட போட்டியை கைப்பற்ற முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல் என்பது வெற்றியாளர்களை பற்றியது மட்டுமல்ல. எதிர்பார்ப்புகள் உங்களை மூழ்கடித்து விடாமல் இருப்பது பற்றியும் தான். இறுதி நாளில் இதனை சிறப்பாக செய்யக்கூடிய அணி வெற்றி பெறும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.