பாகிஸ்தானில் ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கம், நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனிருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDF) என்ற புதிய பதவியை உருவாக்கும் முக்கியமான 27வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தத் திருத்தம், இராணுவத்தின் பங்கை வலுப்படுத்துவதுடன், ஃபீல்ட் மார்ஷலுக்கு வாழ்நாள் சலுகைகளையும், வாழ்நாள் முழுவதும் அவர் மீது எந்த வழக்கும் பதிய முடியாத விலக்குரிமையையும் வழங்குகிறது. மேலும், இந்தத் திருத்தம், உச்ச நீதிமன்றத்தின் சில அதிகாரங்களைப் பறித்து, கூட்டாட்சி மற்றும் மாகாண அதிகாரிகளுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்கும் அதிகாரத்துடன் ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்தை (FCC) நிறுவவும் முயல்கிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இது பாகிஸ்தானின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் தொலைநோக்கு கொண்ட அரசியலமைப்பு மாற்றங்களில் ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், இது “அரசியலமைப்பின் அடித்தளத்தையே அசைத்துவிடும்” என்று எச்சரித்துள்ள பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) உள்ளிட்ட பல கட்சிகள் அங்கம் வகிக்கும் TTAP என்ற எதிர்க்கட்சிக் கூட்டணி, இதற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடங்கியுள்ளது.

“ஜனநாயகம் நீடூழி வாழ்க” மற்றும் “சர்வாதிகாரம் ஒழிக” என்ற முழக்கங்களை எழுப்பி இந்த எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த மசோதா செனட்டில் விவாதத்துக்குப் பிறகு திங்கட்கிழமை வாக்கெடுப்புக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.