இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இத்தாலி நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரோமிற்கு வருகை தந்த அவரை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி டின்னர் கொடுத்து உபசரித்தார். அதன் பிறகு, இரு தலைவர்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க கொலோசியம் (Colosseum) அரங்கிற்குச் சென்று இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவும் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை மெலோனி பகிர்ந்துள்ளார். “பரிசுக்கு நன்றி” என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், பிரதமர் மோடி தனக்கு மிகவும் பிடித்த ‘மெலோடி’ (Melody) சாக்லேட் பாக்கெட்டை மெலோனிக்கு பரிசாக வழங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

​அந்த வீடியோவில் பேசிய மெலோனி, “பிரதமர் மோடி எனக்கு மிகவும் சுவையான மெலோடி டாஃபியை பரிசாகக் கொண்டு வந்துள்ளார்” என்று சிரித்துக்கொண்டே கூற, இரு தலைவர்களும் ஜாலியாக சிரிக்கும் அந்த க்யூட் மொமண்ட் நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. சோசியல் மீடியாவில் மோடி மற்றும் மெலோனி பெயர்களை இணைத்து நெட்டிசன்கள் ‘மெலோடி’ (Melodi – Meloni + Modi) என மீம்ஸ்களை பறக்கவிடுவது வழக்கம்.

அதை இரு தலைவர்களும் நன்கு அறிவார்கள் என்பதால், இந்த முறை ‘மெலோடி’ சாக்லேட்டையே பரிசாகக் கொடுத்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம கன்டென்ட் கொடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் ஜி7 மாநாட்டின் போது “ஹலோ ஃபிரம் மெலோடி டீம்” என்று மெலோனி வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.