
கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி பயணித்த நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 24 கேரட் தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான ஜெய்சன் ஜேக்கப் என்பவர், கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பாலக்கல் கிராமத்தைச் சேர்ந்த நகை வியாபாரி ஆவார்.
கடந்த சில நாட்களாக அவர் தனது ஊழியர் விஷ்ணுவுடன் கோவையில் தங்கியிருந்து, சென்னை சென்று நகைக்கடைகளிலிருந்து 1.25 கிலோ தங்கக்கட்டிகளை வாங்கிய பின் கோவைக்கு ரயிலில் திரும்பினார். அதன் பிறகு, கோவையிலிருந்து காரில் திருச்சூர் நோக்கி பயணித்தபோது இக்கொள்ளை நடந்தது.
கோவை-பாலக்காடு சாலையில் எட்டிமடை அருகே, ஜெய்சனின் கார் பயணித்தபோது, ஒரு லாரி எதிரே வந்து நின்று வழிமறித்தது. அதனைத் தொடர்ந்து லாரியில் இருந்து குதித்த 5 பேர் கொண்ட கும்பல், இரும்புக்கம்பி மற்றும் கத்தியுடன் காரை சுற்றி தாக்கினர்.
காரில் பயணித்த ஜெய்சன் ஜேக்கப்பின் கழுத்தில் கத்தியைக் கொடுத்து மிரட்டிய கும்பல், காரில் வைத்திருந்த 1.25 கிலோ தங்கக்கட்டிகளை அபகரித்து, பின்னர் இருவரையும் தாக்கி காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு, காருடன் தப்பியோடியது. சம்பவம் நடந்த உடனே க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில் கும்பல் மலையாளத்தில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், கொள்ளையர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகம் நிலவுகிறது. தங்கக் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கேரளா பதிவு எண் கொண்ட கார், கேரளாவின் வழுக்கல் பகுதியில் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வாகன எண்கள் மூலம் தடயங்கள் சேகரித்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா மாநிலத்தில் விரிவான தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உறுதி தெரிவித்துள்ளார்.