
வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினருக்கு கடந்த மே 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 6 நாள்கள் மட்டுமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், மே 30 ஆம் தேதி கையில் இருந்த குளுக்கோஸ் ஊசியை மாற்றும் பணியில் இருந்த செவிலியர், டேப்பை கத்தரிக்கோலால் வெட்டும் போது, குழந்தையின் வலது கை கட்டைவிரலை தவறுதலாக வெட்டி விட்டார். டேப்பை கைமுறையிலே மெதுவாக அகற்றாமல், கூரிய கருவி பயன்படுத்தியதில் இந்த விபரீதம் ஏற்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்வதற்காக குழந்தையை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குழந்தையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.