ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30) காலை 8.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, உலகின் பல கடலோர நகரங்களில் சுனாமி எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஹவாய் நகரம் இதில் ஆபத்தான பகுதியில் அடங்குவதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர முயற்சி செய்து வருகின்றனர். எனவே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைக்கிகி கடற்கரைக்கு அருகே உள்ள ஒரு 13வது மாடிக் கான்டோவில் தங்கியிருந்த Selby K Blackburn என்ற அமெரிக்க பெண், தனது குழந்தையுடன் வெளியேறவில்லை. சுனாமி பாதுகாப்பு மண்டலம் தனது வீட்டிலிருந்து வெறும் 15 முதல் 20 நிமிடங்கள் நடைபயண தொலைவில் இருந்தாலும், கடும் போக்குவரத்து, தனக்குக் கார் இல்லாதது மற்றும் வெளியே செல்லும் போது ஏற்படக்கூடிய ஆபத்துகளை காரணமாகக் கூறி, கான்டோவிலேயே தங்க முடிவு செய்துள்ளார்.

அந்தக் காட்சிகளை அவர் டிக் டாக் வீடியோவில் பகிர்ந்ததுடன், “நான் கடலோரத்திலிருந்து பல பிளாக்கள் விலகி உள்ள 13வது மாடியில் இருக்கிறேன். எனக்குக் கார் இல்லை. தெருக்கள் அனைத்தும் நெரிசலாக இருக்கின்றன. சுனாமி பாதுகாப்புப் பகுதிக்கு செல்லும் நடைபயணம் என் குழந்தையுடன் ஆபத்தானதாக இருக்கலாம். எனவே, இந்த இடத்திலேயே தங்குவது தான் பாதுகாப்பான முடிவாக தோன்றுகிறது” என்று தெரிவித்தார். அவரது வீடியோ X இல் ‘HustleBitch_’ என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டு, 8.5 லட்சத்திற்கும் அதிகம் லைக்குகள் பெற்று வைரலானது.

இந்த முடிவை சமூக வலைதளங்களில் சிலர் பாராட்டியதோடு, இன்னும் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். “5 மணி நேர முன்னே எச்சரிக்கை இருந்தும் 15 நிமிடம் நடக்க முடியாதா?” என ஒருவர் கேள்வி எழுப்ப, “சுனாமி வரும் நேரத்தில் தெருக்களில் இருப்பது ஆபத்தானது, ஆனால் உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் 13வது மாடியில் தங்கி இருப்பதும் தவறான முடிவே” என ஒருவர் தெரிவித்தார்.