மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சூர் மாவட்டத்தில், கர்பா பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில், 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட ஆறு பேர், ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக ஓர் ஆம்னி வேனில் கடத்தி இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்து, குற்றவாளிகள் பயணித்த வாகனத்தை தானா ஷம்கர் எல்லையில் தடுத்து நிறுத்தினர். அவர்களுடன் கடத்தப்பட்ட பெண்ணும் மீட்கப்பட்டார். விசாரணையில், ஏழு பேர் சம்பவத்தில் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்டதால், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் தொடர்ந்த மது பழக்கம் மற்றும் தாக்குதல்களால் மன உளைச்சலுக்கு உள்ளான பெண், கணவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனைக் காரணமாகக் கொண்டே இந்த கடத்தல் நடைபெற்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இது பற்றி மண்ட்சூர் எஸ்.பி. வினோத் மீனா கூறுகையில்: “நேற்று இரவு ஒரு பெண் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்ததும், போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனத்தைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர். தற்போது 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.