டெல்லியில் நிதி அழுத்தம், குடும்ப தகராறு ஆகியவற்றால் பரிதாபமாக ஒரு பெண் தனது கணவர் மற்றும் மகளின் முன்னிலையில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துகொண்டார். இந்த சம்பவம் டெல்லியின் காஜிபூர் காவல் நிலைய எல்லைக்குள் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூரைச் சேர்ந்த சாந்தினி தேவி (வயது 31) என்பவரே தற்கொலை செய்தவர். இவர் தனது கணவர் வித்யானந்த் ராயும் மூன்று குழந்தைகளுடனும் டெல்லியில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவ்விருவரும் ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்த கணவர், மன அழுத்தத்துடன் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தற்கொலைச் சம்பவம் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 1 நிமிடம் 12 வினாடிகள் நீளமுள்ள வீடியோவில், சாந்தினி தேவியின் மகள் அழும் குரலும், கணவர் மனைவியை தற்கொலைக்குத் தூண்டுவதைப் போன்ற காட்சிகளும் தெளிவாக காணப்படுகின்றன.
வீடியோவில், பெண் ஒருவர் பெட்டி மற்றும் வாளியை பயன்படுத்தி, மின்விசிறியின் கொக்கியில் துணியால் கயிறு கட்டி, தூக்கில் தொங்குவதை காணலாம். இந்த நேரத்தில் மகள் அழுதபோது, அவளின் தந்தை திட்டியதையும் வீடியோ பதிவு காட்டுகிறது.
தற்கொலைக்குப் பின் தொடக்கவிசாரணையில், சாந்தினி தேவி கடனைத் திருப்பிச் செலுத்த மனைவியுடன் பலமுறை விவாதத்தில் ஈடுபட்டதாகவும், நிதி நிறுவனத்தின் அழுத்தங்கள், தொடர்ந்து வரும் அழைப்புகள் ஆகியவை அவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இறந்தவரின் சகோதரர் ராகேஷ் மண்டல் கூறுகையில், “எங்கள் சகோதரி தற்கொலை செய்துவிட்டதாக அவரது மைத்துனர் அறிவித்தார். ஆனால் தற்போது டெல்லிக்கு வர முடியாமல் இருக்கிறோம். காரணம், எங்களை மிரட்டுகிறார்கள்” என்றார்.
சாந்தினி தேவி மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். இவரது இளைய மகனுக்கு வயது 5. அந்த பெண்ணின் உடல் தற்போது பிணவறையில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்கொலைக்குத் தூண்டியதற்கான சந்தேகத்தின் அடிப்படையில், கணவர் வித்யானந்த் ராயை போலீசார் கைது செய்துள்ளனர். குடும்பத்தினர் இதுவரை எழுத்துப்பூர்வ புகார் அளிக்கவில்லை என்றும், அவர்கள் பயத்தால் காவல் நிலையத்தைத் தவிர்த்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
