தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் விஐபி தரிசனம் சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு சாமானிய பக்தர்களுக்கான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அலிபிரி வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கான இலவச டோக்கன்களில் தற்போது சில மாற்றங்களை தேவஸ்தானம் கொண்டு வந்துள்ளது. அதன்படி வழக்கமாக காளி கோபுரத்தில் தான் இலவச டோக்கன்கள் வழங்கப்படும். ஆனால் இனி அப்படி இல்லை. அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் இலவச டோக்கன் வழங்கப்பட்டு விடும். அதன் பின்னர் காளி கோபுரம் சென்றதும் இலவச டோக்கனுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு சீல் வைத்த டோக்கனோடு வருகை தருபவர்களுக்கு தான் திருமலையில் அனுமதிக்கப்படும் என்றும் நாள் ஒன்றுக்கு எட்டாயிரம் டோக்கன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.