தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் சபரி – நதியா தம்பதி. சென்ட்ரிங் வேலை பார்த்து வந்த சபரி கடந்த 25ஆம் தேதி பணி முடிந்து இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இவர் கொடியூர் பாரதி நகர் அருகே வந்தபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சபரியின் வாகனத்தின் மீது மோதினர். இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சபரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் திருகுமரன் ஆகிய இருவரிடமும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.