கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டம் சூரிஞ்சே பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த 15 வயது மாணவன் லிகித் அமின், வழக்கம் போல் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு மைதானத்தில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தார்.

ஆட்டத்தின் நடுவே அவர் பந்தை சர்வீஸ் செய்துவிட்டு நெட் பகுதியை நோக்கி நகர்ந்த வேளையில், எதிர்பாராதவிதமாக திடீரென தனது கைகளை உயர்த்திவிட்டு மைதானத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார். இதைக் கண்டு பதறிப்போன அவரது நண்பர்களும் அருகில் இருந்தவர்களும் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்றனர்; இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சோக சம்பவம் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததுடன், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. மாணவனின் திடீர் மரணம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் உறுதியாகத் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். விளையாட்டுக் களத்தில் ஆர்முடன் சுற்றிய இளம் வயது பள்ளி மாணவன் திடீரென மாரடைப்பு போன்ற பாதிப்புடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் அவரது குடும்பத்தினரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுவர்களும் இளைஞர்களும் விளையாடும் போதும், நடக்கும் போதும் திடீரென மயங்கி விழுந்து உயிரிக்கும் துயர சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான இளம் தலைமுறையினர் மத்தியில் இதுபோன்று அடுத்தடுத்து நடக்கும் திடீர் உயிரிழப்புகளைத் தடுக்க அரசாங்கமும் மருத்துவத் துறையும் உரிய தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.