மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில், சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது கோழித்தீவனம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில், திருமண முடிந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதி உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிவபுரி மாவட்டத்தின் முக்கியச் சாலையில் கோழித்தீவன மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ ஒன்றின் மீது பயங்கரமாகக் கவிழ்ந்தது.

 

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இருவர், சில தினங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்து உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பிய புதுமணத் தம்பதியினர் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. அதிவேகமாக வந்த லாரி நிலைதடுமாறி ஆட்டோவை நசுக்கும் அந்தப் பதறவைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.