
டெல்லியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமான நாளிலிருந்து பெண்ணை கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதோடு ஆண் குழந்தையை தான் பெற்றெடுக்க வேண்டும் என கூறி துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் கர்ப்பமாகவே வயிற்றில் இருக்கும் சிசு என்ன என்று அறிவதில் கணவர் குடும்பத்தினர் ஆர்வத்துடன் இருந்துள்ளனர். இதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்ட நிலையில் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் அமைதியாக இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு அழகிய இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
அந்த சமயத்தில் கணவரும் அவருடைய குடும்பத்தினரும் தரமான சிகிச்சை வழங்குவதாக கூறி குழந்தைகளை கொண்டு சென்றுள்ளனர். அதன் பிறகு குழந்தைகள் எங்கே என்று அந்த பெண் கேட்க கணவரும் அவருடைய குடும்பத்தினரும் உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் காவல்துறையினரை அணுகியுள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போதுதான் குழந்தைகள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் பெண் குழந்தை என்பதால் கணவரும் அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து பச்சிளம் குழந்தைகளை கொன்று புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.