
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராமகூர் கிராமத்தைச் சேர்ந்த கங்காராம் (வயது 75) மற்றும் அவரது மனைவி சோமம்மாள் (வயது 69) ஆகிய இருவரும், மருமகளால் தொடுக்கப்பட்ட வரதட்சணை கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், போதன் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு வந்தனர். நடக்கவும் இயலாத நிலையிலும், ஒவ்வொரு விசாரணை தேதிக்கும் தவறாமல் நீதிமன்றத்துக்கு வந்த இவர்களது நிலையை நீதிபதி சாய் சிவா கவனித்தார்.

கடந்த வாரம், வழக்கு விசாரணை நாளன்று கங்காராமால் ஆட்டோவிலிருந்து இறங்கி நீதிமன்றத்துக்குள் நடந்து வர இயலாத நிலை ஏற்பட்டது. இதைப் பற்றிய தகவலை அவரது வழக்கறிஞர் நீதிபதிக்கு தெரிவித்தார். உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்த நீதிபதி சாய் சிவா, நேராக நீதிமன்றத்துக்கு வெளியே சென்று, கங்காராமிடம் ஆட்டோவில் இருந்தபடியே நேரில் விசாரணை நடத்தினார்.
விசாரணையின் முடிவில், தம்பதியர் மீது வழக்கு தொடர்வதற்கேற்ப ஆதாரங்கள் இல்லை என்றும், மருமகளால் வேண்டுமென்றே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார். அதன்பேரில் வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த மனிதாபிமானம் நிரம்பிய செயல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, நீதிபதியின் செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது