துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. மேலும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் திரும்பிய இடமெல்லாம் பிணக்குவியலும் மர்ம ஓலங்களும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளும் மட்டுமே காண முடிகின்றது. மலை போல் குவிந்து கிடக்கும் கட்டிட ஈடுபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். இந்த பணியில் இந்தியா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இரு நாடுகளிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்ட செய்தி கூறப்பட்டிருப்பதாவது “நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று இருக்கும் வேளையில் 48 பேர் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டின் அதிபர் தாயிப் எர்டோகன் கூறியதாவது “துருக்கியில் பத்துக்கும் மேற்பட்ட மாகாணங்களில் மூன்று மாத கால அவசரகால நிலையை பிறப்பித்துள்ளேன். இந்த நேரத்தில் திருட்டில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள். மேலும் கடத்தலில் ஈடுபடுவோர் சட்டத்திடமிருந்து கண்டிப்பாக தப்பிக்க முடியாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஜெர்மனி, ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த மீட்புப்படையினர் ஹதே பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வெவ்வேறு குலுக்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரிய ராணுவம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது “நாங்கள் மீட்பு பணிகளில் இருக்கும்போது பாதுகாப்பு குறைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீட்பு மற்றும் நிவாரண பணியை நாங்கள் தொடர்வோம்” என கூறியுள்ளது.