பெங்களூரைச் சேர்ந்த பயணி ஒருவர் ராபிடோவில் பயணம் செய்தபோது, அவரிடம் ஓட்டுநர் முகமது ரபீக் என்பவர் கூடுதல் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயலியில் பயணக் கட்டணமாக 729 ரூபாய் காட்டிய நிலையில், சுங்கக் கட்டணம் (Toll fee) என்ற பெயரில் கூடுதலாக 350 ரூபாயை ஓட்டுநர் கேட்டுள்ளார். “வாடிக்கையாளர் சேவை மையத்திடம் பேசிய பிறகே பணம் தருவேன்” என்று பயணி கூறியதால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், நடுரோட்டில் பயணியை நோக்கி சத்தமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

​இந்த கசப்பான அனுபவத்தை அந்தப் பயணி தனது எக்ஸ் (X) வலைத்தள பக்கத்தில் வீடியோ ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பையும், நியாயமான கட்டண முறையையும் உறுதி செய்ய வேண்டிய நிறுவனங்கள், இது போன்ற அத்துமீறல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையதளவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஓட்டுநரின் இந்த அடாவடித்தனம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதங்களை கிளப்பியுள்ளது.