இந்தியாவில் நிலவும் தூய்மை குறித்த முரண்பாடுகளைத் தனது புதிய வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பிரபல பயண விளாகர் ஷெனாஸ் ட்ரெசரி.

அண்மையில் அவர் வெளியிட்ட பதிவொன்றில், இந்தியாவை உலகின் மிகவும் அசுத்தமான நாடு என்று குறிப்பிட்டிருந்தது இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆசியாவின் மிகத் தூய்மையான கிராமமாக அங்கீகரிக்கப்பட்ட மேகாலயாவில் உள்ள ‘மவ்லின்னாங்’ கிராமத்தைப் பற்றிய புதிய வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும் அங்குள்ள மக்கள் அரசாங்கத்திற்காகக் காத்திராமல், தாங்களாகவே முன்வந்து ஒவ்வொரு 100 மீட்டருக்கும் மூங்கில் குப்பைத் தொட்டிகளை அமைத்து, பிளாஸ்டிக் மற்றும் புகைபிடித்தலுக்குத் தடை விதித்துத் தங்கள் கிராமத்தைப் பூஞ்சோலை போலப் பராமரித்து வருவதை அவர் பாராட்டியுள்ளார்.

“>

இருப்பினும், இந்த அழகைக் கண்டு வியக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் சொந்த நகரங்களை மட்டும் குப்பைக் காடாக மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என்ற ஒரு முக்கியமான கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். தூய்மையான ஒரு கிராமத்தை ரசிக்கத் தெரிந்த மக்களுக்கு, தங்களின் சொந்த ஊரையும் அதுபோல வைத்திருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு இல்லாதது ஒரு பெரிய முரண்பாடு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்தின் மீது பழியைப் போடாமல், மவ்லின்னாங் கிராம மக்களைப் போல ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த தூய்மை சாத்தியமாகும் என்பதை இந்த வீடியோ நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.