அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு, மக்கள் விமானப் பயணங்களைப் பற்றி கவலையுடன் இருக்கின்றனர். இதற்கு இடையே, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விமானத்தின் எகானமி வகுப்பில் ஒரு பெண் பயணியுடன் இருக்கை தொடர்பான சண்டையில் ஈடுபடுகிறார்.

அவர் பேசும் விதமும், வேகமும் மற்ற பயணிகளை சங்கடப்படுத்திய நிலையில், விமான ஊழியர்கள் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் எதற்கும் சமாதானம் ஆகாமல் வாக்குவாதம் செய்கிறார்.

இந்த சூழ்நிலையில், அந்த பெண்ணின் மகன் மெல்லவே “அம்மா, சத்தம் போடாதீங்க” என சொல்கிறான். ஆனால் தாய் தனது கோபத்தில் மகனையே அடிக்கத் தொடங்குகிறார். மகன் தொடர்ந்து அம்மாவை அமைதியாக இருக்கக் கேட்டுக் கொண்டாலும், அந்த பெண் தன் கோபத்தை மகனிடமே காட்டுகிறார். இந்தக் காட்சிகள் விமானத்தில் பயணித்தவர்கள் எடுத்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் ‘11A இருக்கைக்காக சண்டை’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு, 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. பெரும்பாலான மக்கள் அந்த சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

“தாயின் இந்த நடத்தை வேதனையளிக்கிறது”, “குழந்தைகளுக்கே இப்படி நடக்கும் போது, அவர்கள் எப்படி நிம்மதியாக வளர முடியும்?” என்பன போன்ற கருத்துகள் பதிவாகி வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் விமானப் பயணங்களில் மரியாதை, ஒழுக்கம் குறைவது குறித்த பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.