இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் சண்டை சச்சரவுகளும், வதந்திகளும் மட்டுமே அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், மனிதநேயத்தை உணர்த்தும் ஒரு குட்டி நெகிழ்ச்சி வீடியோ இணையவாசிகளின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. பள்ளிக்குச் செல்லும் சிறுவனின் உன்னதமான எண்ணமும், அதற்கு மதிப்பளித்த ஒரு ஆட்டோ ஓட்டுநரின் பரந்த மனசும் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், பள்ளிச் சிறுவன் ஒருவன் தனது தங்கை மற்றும் மற்றொரு சிறுமியுடன் பள்ளிக்குச் செல்வதற்காக ஆட்டோவில் அமர்ந்திருப்பது காட்சியளிக்கிறது. பள்ளிக்குச் சென்றடைந்ததும் அந்த இரண்டு சிறுமிகளும் ஆட்டோவை விட்டு கீழே இறங்க, அந்த சிறுவன் தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து ஆட்டோ ஓட்டுநரிடம் வாடகையாகக் கொடுக்க முயன்றுள்ளான்.

அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர், “இவர்கள் இருவரும் உனது தங்கைகளா?” என்று அன்போடு கேட்க, அதற்கு அந்த சிறுவன், “இல்லை, ஒருவர் மட்டுமே என் தங்கை; மற்றொரு சிறுமிக்கு ஆட்டோ கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தாள், அதனால் அவளையும் என்னுடன் ஆட்டோவில் ஏற்றி அழைத்து வந்தேன்” என்று மிக எதார்த்தமாகப் பதிலளித்துள்ளான். சிறுவனின் இந்த முதிர்ச்சியான பேச்சைக் கேட்டு நெகிழ்ந்துபோன ஆட்டோ ஓட்டுநர், அவனிடம் ஆட்டோ வாடகையைப் பெற மறுத்துவிட்டார்.

மேலும், “இந்த பணத்தை நீயே வைத்துக் கொள், நீ மிகச் சிறந்த காரியத்தைச் செய்திருக்கிறாய்; இந்த காசில் நீ ஏதேனும் வாங்கிச் சாப்பிடு அல்லது அந்த சிறுமிகளிடம் கொடுத்துவிடு” என்று கூறி அவனுக்கு வாழ்த்து தெரிவித்தார். எக்ஸ் (X) தளத்தில் ‘@lakshaymehta08’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த நெகிழ்ச்சியான வீடியோ, இதுவரை 47 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. சிறுவனின் நல்ல வளர்ப்பையும், ஆட்டோ ஓட்டுநரின் பெருந்தன்மையையும் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.