சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான தனுஷ் (25) என்ற மகன் உள்ளார். கடந்த 1-ஆம் தேதி தனுஷும், சென்னை வடபழனி சாலிகிராமத்தை சேர்ந்த அவரது நண்பர் சந்துருவும் (18) கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கொடைக்கானலில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். கடந்த 6-ஆம் தேதி அருங்காட்டுக்குளம் என்ற பகுதிக்கு சென்று குளத்தில் இறங்கி தனுஷ் குளித்தார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தனுஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சந்துரு தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் கடந்த 2 நாட்களாக தனுசை தேடினர். 3-வது நாளாக நேற்று தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு தனுஷ் குளத்துக்குள் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.