கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் அகும்பே மழைக்காடுகளில், பாதுகாக்கப்பட்ட வகை பாம்புகளை  சிலர் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிவமொக்கா நகரின் இந்திராநகர் பகுதியில் உள்ள மாத்தூர் சாலையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோவில், ஒருவர் பாம்புகளின் வாயில் செலோ டேப் ஒட்டும் காட்சியும், மற்றொருவர் அவற்றைப் பிடித்திருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இந்த செயலைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்த குழுவினரும் அந்த வீடியோவில் தென்படுகின்றனர். சம்பவம் Instagram ரீலாகப் பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவில் காணப்படும் முக்கிய நபர் முகமது இர்பான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ‘பாம்பு மீட்பர்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவலாக செயல்பட்டு வந்தவராக அறியப்படுகிறார். வீடியோ வைரலான பிறகு அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

சம்பவம் தொடர்பாக பத்ராவதி வன அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி, இர்பானின் வீட்டில் சோதனையை மேற்கொண்டனர். அப்போது மூன்று இந்திய பாறை மலைப்பாம்புகள் மற்றும் இரண்டு நாகப்பாம்புகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து மீட்கப்பட்டன. அனைத்து பாம்புகளும் 1972ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் கீழ் பட்டியலிடப்பட்ட வகைகளாகும்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அகும்பே பகுதியில் உள்ள பல ஆராய்ச்சி மையங்களிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.