ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இளைஞர்கள் அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜெய்ப்பூர் நகரின் முக்கிய சாலையான ‘நியூ சாங்கனேர்’ சாலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பைக் டாக்ஸியில்  பின்னால் அமர்ந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணின் அருகில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், பின்னால் அமர்ந்திருந்த இளைஞர், பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணின் முதுகில் அநாகரீகமான முறையில் கை வைப்பதும், அவரிடம் தவறாக நடந்துகொள்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் அந்த இளைஞர்களைத் தடுத்து அடிக்க முயன்றும், அவர்கள் தொடர்ந்து அநாகரீகமாகச் செயல்பட்டுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, ஜெய்ப்பூர் காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். பைக் டாக்ஸி நிறுவனத்திடம் இருந்து தகவல்களைப் பெற்று, விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டவர்கள் மன்ராஜ் மீனா மற்றும் சுதாமா மீனா என்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்காத நிலையிலும், பொதுவெளியில் பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்ததாகக் கூறி காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பார்த்த நெட்டிசன்கள், ராஜஸ்தானில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். “நடுரோட்டில் ஒரு பெண்ணிற்குப் பாதுகாப்பு இல்லாதது வெட்கக்கேடானது” என்றும், “குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.