உத்தரப்பிரதேச மாநிலம் பஹரம்பூர் பகுதியில், ஒரு வீட்டில் இருந்து எல்பிஜி சிலிண்டர் திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிறுவன், பொதுமக்களால் நடு ரோட்டில் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு பெண் சிறுவனை பலமுறை அறைந்தும், மற்றொரு ஆண் நபரும் இடையில் வந்து அவனை தாக்கியதும் காணப்படுகிறது. சிறுவன் தொடர்ந்து மன்னிப்பு கேட்டும், மக்கள் தாக்கியதை வீடியோவில் காணலாம்.

 

 

இந்த வீடியோ X தளத்தில் @lokeshRlive என்ற பயனாளரால் பகிரப்பட்டு, “சிலிண்டர் திருடியதாகக் கூறி சிறுவனை மக்கள் தாக்குகிறார்கள்; ஆனால் இவ்வாறு தண்டிக்க அவர்களுக்கு எந்த உரிமை உள்ளது?” எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காசியாபாத் போலீசிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த வீடியோ பரவியதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் சிறுவனின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மேலும் சீண்டெடுத்து திருடியதாக சந்தேகம் எழுந்ததால் இப்படி சிறுவனை தாக்கியது தவறு என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.