ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடிப்பில், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் ‘கிங்’ திரைப்படம், 2026 ஆம் ஆண்டில் வெளியாக உள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த ஆண்டு ‘கிங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே ஒருவரையொருவர் காதலிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னணியில் ‘மைன் தோ பெஹெக் கயா’ என்ற பாடல் ஒலிக்க, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த வீடியோவை X  தளத்தில் பகிர்ந்த ஒருவர், இது ‘கிங்’ படத்தின் கசிந்த பாடல் காட்சி என குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதனை ஆராய்ந்த பிற நெட்டிசன்கள், அந்த வீடியோ உண்மையான காட்சிகள் அல்ல; செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ எனத் தெரிவித்தனர்.

இந்த AI வீடியோவை பார்த்த பலரும் கிண்டலாகவும் விமர்சனமாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு நெட்டிசன், “இந்த எடிட்டை அப்படியே திரையரங்குகளில் போட்டால் 100 கோடி வசூல் உறுதி” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “திரையில் ஷாருக்கான் – சும்மா சும்மா ‘சும்மா டே டே’ செய்ய மாட்டார்… இது AI உருவாக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒருவர், “முகபாவங்களில் உணர்ச்சி இல்லாததால், எல்லா காட்சிகளும் ஒரே மாதிரி செயற்கையாகத் தெரிகிறது” என விமர்சித்துள்ளார்.

‘கிங்’ படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே தவிர, அனில் கபூர், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, அபய் வர்மா, சுஹானா கான், அர்ஷத் வர்சி, ராகவ் ஜுயால், ஜெய்தீப் அஹ்லாவத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இது ஒரு முழுமையான ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியது. படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 2026 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி நாளில் படம் திரைக்கு வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால், ‘கிங்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.