சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தினரால், நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்ச் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடல்களில் “கோட் வேர்ட்” பயன்படுத்தி கொகைன் வாங்கியதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கோட்வேர்டை வைத்து, பெங்களூரைச் சேர்ந்த போதைப்பொருள் சப்ளையர் கெவின் என்பவரிடம் கிருஷ்ணா கொகைன் வாங்கியதைக் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள பிரதீப்பின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் கெவின், பெருந்தொகை போதைப்பொருட்களை பெங்களூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ளார். இவருடன் கிருஷ்ணா வங்கி பரிவர்த்தனை மூலமாக தொடர்பில் இருந்ததும், ஜி-பே போன்ற டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது. இதன் அடிப்படையில், கெவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கொக்கைன், எம்டிஎம்ஏ, மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு விதமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நடிகர் கிருஷ்ணா மீது சந்தேகம் எழுந்ததும், அவர் கேரளாவில் நடந்து வந்த படப்பிடிப்பில் இருந்தார். நுங்கம்பாக்கம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 24 மணி நேர விசாரணைக்கு பிறகு, அவரது வாட்ஸ்அப் உரையாடல்கள், மேலாளரின் ஓட்டுனருடன் இருந்த தொடர்புகள், மற்றும் பண பரிவர்த்தனைகள் ஆகியவை உறுதியான ஆதாரமாக நிரூபிக்கப்பட்டது. இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியுமான கிருஷ்ணா, “யாமிருக்க பயமேன்”, “கற்றது களவு” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் தொடக்கமாக, மதுபான கூடத்தில் நடந்த மோதலில் அதிமுக- முன்னாள் நிர்வாகிகள் அஜய் வாண்டையார் மற்றும் பிரசாத் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையிலேயே போதைப்பொருள் விற்பனையாளர்கள், திரைத்துறையினரின் தொடர்புகள் என சிக்கல்கள் விரிந்துள்ளன. தற்போது, போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்துக்கு அடுத்தபடியாக கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டிருப்பது, திரையுலகத்தில் அடுத்ததாக யார் சிக்கப்போகிறார்கள் என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணையை மேலும் விரிவுபடுத்தி வருகின்றனர். இன்னும் சில நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் சினிமா துறையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய திருப்பங்களை எடுக்கத் தொடங்கியுள்ளது.