தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான நான் ஈ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நானி. இந்த படத்திற்கு பிறகு பல வெற்றி படங்களில் நடித்த நானி தற்போது தசரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில், மார்ச் மாதம் 30-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் நானி ஒரு படத்திற்கு 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வந்த நிலையில், தற்போது தொடர் வெற்றிகளின் காரணமாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அதன்படி ஒரு படத்திற்கு நடிகர் நானி 15 கோடி ரூபாய் வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். மேலும் இந்த  தகவல் தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.