தமிழ்நாடு அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,299 பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள், வரி வசூல், பிறப்பு-இறப்பு பதிவு, நிலத்தரப்பு கணக்கீடு, நிர்வாக பணி ஆவணங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயமாக தமிழைப் படித்திருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு எழுத்துத் தேர்வு இல்லை. கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்:

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் – 10 மதிப்பெண்கள்

இருசக்கர வாகனம்/சைக்கிள் ஓட்டும் திறன் – 10 மதிப்பெண்கள்

தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன் – 30 மதிப்பெண்கள்

வசிப்பிடம் சான்றிதழ் – 35 மதிப்பெண்கள்

நேர்காணல் – 15 மதிப்பெண்கள்

மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வான நபர்கள் அவரவர் ஊரிலேயே அரசு பணியில் சேர வாய்ப்பு உள்ளது.

இந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தனது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இணையதளங்களில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. உங்களது கிராமத்தில் அரசு வேலைக்கு எதிர்பார்ப்போடு இருந்தால், இது சிறந்த வாய்ப்பு என்பதை மறக்க வேண்டாம்.